Saturday 24 October 2015

சிதைவின் வாசலில் வரலாறு - முத்துப்பட்டி

மலைகள் எனது அகராதியில் பிரம்மிப்பு என பொருள்படுகின்றன. பிறந்தது முதல் இவற்றினூடே பயணித்துக் கொண்டிருப்பதும் கூட காரணமாக இருக்கலாம். பேருந்தினில் சன்னல் வழியாக என்னுடனே பயணிக்கும் நிலவையும் மேகங்களையும் கவனிக்கத் துவங்கியது போலவே சில தொலைவு உடன் நகரும் இம் மலைகளையும் கண்டு ரசிக்கத் துவங்கினேன். உயர்ந்த மலைகளில் யாரிருப்பர்? என்ன இருக்கும்? மலைகளின் பின்புறம் எப்படி இருக்கும்? மலைகளின் மீது நடப்பது எப்படியான உணர்வைத் தரும்!? என ஆயிரம் கேள்விகள் எதிர்பார்ப்புகள் பால்யம் முதல் துரத்திக் கொண்டு வந்தன. துரத்திவந்த கேள்விகள் என்னை விட்டுச் சென்ற இடம் பசுமைநடை. பால்யத்தின் கேள்விகளுக்கும் எதிர்பார்ப்புகளுக்கும் பசுமைநடை மூலம் விடை கிடைத்தது. மலைகளுக்கு பின் உள்ள அரசியல் வியபாரம் வரைக்கும் கூட தேடாத கேள்விகளுக்கும் பதில் கிடைத்தது.

Thursday 22 October 2015

நஞ்சுண்ட தெந்தன் கனவு

சூன்-2015ல் கூழாங்கற்கள் அமைப்பு ஏற்பாடு செய்திருந்த இலக்கிய கூட்டத்தின் மூலம் தான் “நஞ்சுண்ட காடு” மற்றும் “விடமேறிய கனவு” இவ்விரு நூல்களும் எனக்கு அறிமுகம். இந்நூற்கள் குறித்து பேச்சாளர்கள் பேசிய போது மனதுள் ஏற்பட்ட தாக்கம் இவற்றை வாங்கிட உடல் கூசியது. பெரும் மன உலைச்சலோடு வீடு திரும்பிய தினம் அது. 2008-2009 தினங்களில் அனுபவித்த உணர்வினை ஒத்திருந்தது அந்த உணர்வு. ஏதோ துணிவு வர ஆகஸ்ட்-2015 மதுரை புத்தகத் திருவிழாவில் இவ்விரு நூற்களையும் தேடி வாங்கி, அதனை இப்போது வாசிக்கும் மனப் பக்குவம் வாய்த்தது.


2009-ல் ஈழ மண்ணில் நிகழ்ந்த போரின் தாக்கத்தினை இரண்டு நூலாக பதிவு செய்துள்ளார் அண்ணன் குணா கவியழகன். போருக்கு முந்தைய சூழலில் போராளிகளது வாழ்வியல், போருக்கு பிந்தைய சூழலில் அவர்களது அவமானகரமான வலிகள் என நகர்கிறது.

Sunday 11 October 2015

பழங்குடிகள் பாதுகாக்கும் வரலாறு – கோத்தர் மலை2

          தாயின் நீர்க்குடத்துக்குள் குழந்தை மிதப்பதைப் போல வள்ளுவர் நகர் சமுதாயக்கூடத்திற்குள் கிடந்தோம். சுற்றிலும் பனி. இருண்ட மலைகளுக்கு இடையில் பூச்சிகளும் தவளைகளும் சோழி குழுக்கிக் கொள்ளும் சப்தம் சுற்றிலும் இருளுக்கு இசையமைத்துக் கொண்டிருந்தது. சற்று விடிய பறவைகள் தங்களது தாய் மொழியில் பாடிக் கொண்டும் பேசிக் கொண்டும் திரியத் துவங்கின. இந்த பனியில் கம்களிகளைச் சுற்றாமல் இவைகளால் எப்படி சுற்றித்திரிய இயல்கிறதோ!!



         படவியை கையில் எடுத்துக் கொண்டு சூரிய உதயத்தை எடுக்க முயற்சித்து இளஞ்சிவப்பு மேகங்களை மட்டுமே படமாக்க இயன்றது. செடி கொடிகள் மீதும் பனி சிந்திய ஈரம். வாகனக் கண்ணாடிகளில் படிந்திருந்த பனிப்படிமங்களை கண்டதும் பால்ய வயது நினைவு வர, எனது பெயரை எழுதிப் பார்த்தேன். யாரும் பார்க்கிறார்களா என சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு அழித்தேன். அது கண்ணீராக வடிந்தது.

Tuesday 6 October 2015

மலையகத் தமிழர்களின் பச்சை ரத்தம் - கோத்தர்மலை-1

          புத்தகங்களும் பயணங்களும் வாழ்வதற்கான காரணங்களை அர்த்தப்படுத்துகின்றன. இவை அமையாதவர்கள் இயந்திர யுகத்தில் சிக்கித் திணறுவதாகவே தோன்றுகிறது. அதே போன்ற கால இயந்திர சக்கரத்தில் சுற்றிக் கொண்டிருந்த என்னை மீட்டெடுத்தது “பசுமைநடை” என்பதை நான் எங்கும் பதிவு செய்வேன். பசுமைநடை எனும் கைகாட்டி பலகை எனது வாழ்க்கை பயணத்தின் திசையை திருப்பியிராவிட்டால், இன்று அரவிந்தன் என்கிற தோழமையும் அத்தோழமையின் மூலமாக “ஊர்க்குருவிகள்” எனும் தோழர் வட்டத்தோடு இந்த கோத்தகிரி பயணமும் வாய்த்திருக்காது.


          
          திருமங்கலத்தின் எனது வீட்டு வாசலில் இருந்து துவங்கியது பயணம். பேருந்து நிலையத்திற்கு நடந்து செல்லும் போது இருசக்கர வாகனத்தில் தலைக்கவசம் இல்லாமல் வந்த ஒருவரிடம் கையூட்டு பெற்றுக் கொண்டிருந்தார் காவலர் ஒருவர். இன்னும் விடியவில்லை. பொழுதும் தான்.